Tuesday 12 November 2013

ஜோ. தமிழ்ச்செல்வன், “ம.க.இ.க வை நம்பி ஏமாந்து விடாதீர்கள்”

ஜோ. தமிழ்ச்செல்வன், “ம.க.இ.க வை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். மார்ச் 19, 2012 அன்று போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியனும், கூட்டப்புளி கைது செய்யபட்டபோது சக வழக்குரைஞர் என்ற முறையில், “வாருங்கள் போகலாம் என்று இவரை இடிந்த கரை செல்வதற்கு அழைத்தேன்". "எனக்கு வேறு வேலை இருக்கிறது, வரமுடியாது" என்று அப்போது வர மறுத்தார். 

அன்றைக்கு வராதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு மக்களைப் பிணையில் எடுப்பதற்கான வேலைகள் 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்தன. 15 நாளும் அவருக்கு தொடர்ந்து வேறு முக்கிய வேலைகள் இருந்திருக்கின்றன. அவர் வரவில்லை. எந்த வேலையும் இல்லாதவர்களான நாங்கள்தான் போய்க்கொண்டிருந்தோம். இந்த லட்சணத்தில் “தொடக்க காலத்திலிருந்தே கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்ததால் ம.க.இ.க வை நான் நன்கு அறிவேன்” என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்.

“கைது செய்யப்பட்ட 200 பேரையும் 200 ரூபாய் செலவில் பிணையில் எடுத்திருக்க முடியும்” என்கிறார் தமிழ்ச்செல்வன். அப்படிப்பட்ட சாகசங்களையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாட்டில் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும்தானே உண்டு? 80 இன்னோவா கார்களில் 15,000 பக்தர்களை கேதார்நாத்திலிருந்து காப்பாற்றியவரான நரேந்திர மோடி வேண்டுமானால், 200 ரூபாயில் 200 பேரைப் பிணையில் எடுத்திருக்க முடியும். ஜோ.தமிழ்ச்செல்வனால் எப்படி முடியும் என்று சிந்தித்தபடியே நாகர்கோயில் நகரின் ஒரு குட்டிச் சுவரில் ஒன்னுக்கடிப்பதற்காக ஒதுங்கினேன்.

எதிரில் தமிழ்ச்செல்வனும் மோடியும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில் சிறுநீர் உறைந்து விட்டது. அந்தக் சுவரொட்டியை உங்களுக்கும் காணத்தருகிறேன். “புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை – நரேந்திர மோடி - ஜோ.தமிழ்ச்செல்வன், தெற்கு எழு
த்தாளர் இயக்கம்."